கண்ணிமைத்தலோடு கைநொடித்தல் செயலின் பொருத்தப்பாடு குறித்த விவாதம் வரலாற்றுக் காலத்தில் நிகழ்ந்திருப்பதை அமிர்தசாகரரின் யாப்பருங்கலக் காரிகையில் கொடுத்துள்ள சான்று நூற்பாவின் வாயிலாக அறிந்துகொள்கிறோம். ‘கண்ணிமை நொடிஎன அவ்வே மாத்திரை’ என்று கூறும் தொல்காப்பியர், கைநொடி என்பது கைநொடித்தல் செயலுக்கான கால அளவா இல்லை அதன் மூலம் எழும் ஓசையின் கால அளவா என்பதைக் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. அதற்கு உரை எழுதிய இளம்பூரணர், “இமை என்றது, இமைத்தல் தொழிலை. நொடி என்றது, நொடியிற் பிறந்த ஓசையை.” என்று தெளிவுபடுத்துகின்றார். நச்சினார்க்கினியரும், “இக்கண்ணிமை இரட்டித்து வருதல் நெடில் எழுத்துக்கும், அது மூன்றும் நான்குமாய் வருதல் அளபெடைக்கும் கொள்க. அதுபோலவே நொடித்தல் தொழிலில் பிறந்த ஓசையது தோற்றக்கேட்டுக் காலக்கழிவும் ‘அ’ எனப் பிறந்த ஓசையது தோற்றக்கேட்டுக் காலக்கழிவும் ஒக்கும்.” எனவும், “கண்ணிமை தொழில் மேலும், நொடி ஓசை மேலும் நின்றன என்க.” எனவும் விவரிக்கின்றார். மேலும், “கண்ணிமைக்கும் நொடிக்கும் அளவு ஆயிரம் வரம்பின்றி ஓடுமென்று கருதி ‘நுண்ணிதின் உணர்ந்தோர் கண்ட ஆறு’ என்று முடிந்தது காட்டலென்னும் உத்தி கூறினார்.” என முன்னோர் முடிபில் தொல்காப்பியர் கொண்டிருந்த உறுதிப்பாட்டைப் புலப்படுத்துகின்றார். ஆனால், அமிர்தசாகரர் மாத்திரை குறித்துக் கருத்துரைக்கும்போது, “உன்னல் காலே; ஊன்றல் அரையே; முறுக்கல் முக்கால்; விடுத்தல் ஒன்றே”
என்ற நூற்பாவைச் சான்று காட்டுகின்றார்.
இதன் பொருள், நொடிப்பதற்காக நினைப்பது கால் மாத்திரை அளவு, விரல்களைச் சேர்த்தல் கால் மாத்திரை அளவு, விரல்கள் ஒன்றோடு ஒன்று உரசுதல் கால் மாத்திரை அளவு, ஒலியை விடுத்தல் கால் மாத்திரை அளவு என்று ஒரு மாத்திரையளவு காலத்தை நான்கு பகுதிகளாகப் பகுத்து, கை நொடித்தலுக்கான செயல் முழுதும் சேர்த்து ஒரு மாத்திரை அளவு என்று அறுதியிடப்படுகின்றது. இந்த விவரிப்பு, கை நொடித்தல் செயலுக்கான காலமும், கண் இமைத்தல் செயலுக்கான காலமும் சமமானவையாக இருக்க முடியுமா என்ற வினாவை எழுப்புகின்றது. இங்கே, கண் இமைத்தல் செயல் நம் முயற்சியின்றி இயல்பாக நிகழக்கூடியது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஒரு மாத்திரை அளவு என்பது உயிர்க்குறில் எழுத்து ஒன்றின் ஒலிப்பு அளவாகும். ‘அ’ என்ற எழுத்தை ஒலிப்பதற்கான முழுமையான செயல்பாட்டை நாம் மேற்கூறிய கருத்தோடு பொருத்திக் காணலாம். எழுத்தை ஒலிக்க வேண்டும் என்று நினைத்தல் (உன்னல் காலே), அவ்வொலியை ஒலிப்பதற்கான உறுப்புகள் உரிய நிலையில் பொருந்துதல் (ஊன்றல் அரையே), உறுப்புகள் செயல்படல் (முறுக்கல் முக்கால்), ‘அ’ என்ற ஒலியை வாயிலிருந்து வெளியேற்றுதல் (விடுத்தல் ஒன்றே) என்று எடுத்துக்கொண்டால் மட்டுமே பொருத்தமாக இருக்கும். ஆனால், ‘அ’ என்ற எழுத்தின் ஒலிப்பு அளவு அவ்வெழுத்துக்கான காற்று வாயிலிருந்து வெளியேறி எழுப்பும் ஒலியின் கால அளவைக் குறிக்கின்ற காரணத்தால், கை நொடித்தலின் போது எழும் ஓசையின் அளவு என்ற தொல்காப்பிய உரையாசிரியர்களின் கருத்தே பொருத்தமானதாகக் கொள்ளத்தக்கது.
2. பாடத்தில் விவரிக்கப்படாத அளவை முறைகளுக்கான விளக்கம்
1. நிறுத்தளத்தல் – துலாக்கோல் முதலிய நிறையளவைகளால் நிறுத்து அளத்தல்.
2. பெய்தளத்தல் – ஒன்றனுள் பெய்து அளத்தல். கலம் முதலியவற்றில் பெய்து அளத்தல்.
3. நீட்டியளத்தல் – நீட்டல் அளவை
4. நெறித்தளத்தல் / தெறித்தளத்தல் – ஒன்றனைப் புடைத்து ஒலியை உண்டாக்கி அதனைச் செவியாற்கேட்டு நிதானித்து அளந்துகோடல். மத்தளம், வீணை முதலியவற்றைப் புடைத்து அவற்றொலியைச் செவிகருவியாக அளந்து கோடலால் அறியப்படுதல்.
5. தேங்கமுகந்தளத்தல் – நாழி முதலியவற்றால் அளத்தல்.
6. எண்ணியளத்தல் – ஒன்று, இரண்டு, மூன்று என்று எண்ணியளத்தல்.
எழுத்தெனப் படுப அகரமுதல் னகர இறுவாய் முப்பஃ தென்ப சார்ந்துவரல் மரபின் மூன்றலங் கடையே
எழுத்துக்களின் வகைகளைக் கூறுகின்ற இந்த முதல் நூற்பாவிற்கு உரை கண்ட இளம்பூரணர், “அகரமுதல் னகர இறுவாய்” என்று தொல்காப்பியர் அகரத்தை முன்னும் னகரத்தைப் பின்னும் வைத்தமைக்கான காரணத்தை ஆராய்கின்றார். அகரத்தை முன் வைத்தமைக்குக் காரணம், அகரமானது தானும் இயங்கித் தனிமெய்களையும் இயக்குகின்ற சிறப்பின் காரணமாக முன்வைக்கப்பட்டது என்றும், னகரம் வீடுபேற்றிற்கு உரிய ஆண்பாலை உணர்த்துகின்ற சிறப்பின் காரணமாகப் பின் வைக்கப்பட்டது என்றும் கருத்துரைக்கின்றார்.
இதனோடு ஒத்த கருத்தினையே நச்சினார்க்கினியரும் உரைக்கின்றார், அவர், எழுத்துக்களுக்கெல்லாம் அகரம் முதலாவதற்குக் காரணம், ‘மெய்யின் இயக்கம் அகரமொடு சிவணும்’ என்ற தொல்காப்பிய நூற்பாவைச் சுட்டிக் கூறுவர் என்று பிற உரையாசிரியர்களைச் சார்ந்து கருத்துரைக்கின்றார். மேலும், வீடுபேற்றிற்கு உரிய ஆண்மகனை உணர்த்தும் சிறப்பால் தொல்காப்பியர் னகரத்தைப் பின்வைத்தார் என்று தம் கருத்தாகக் கூறுகின்றார்.
இவ்விரு கூற்றுக்களிலும் தொல்காப்பியர் அகரத்தை முன்வைத்தமைக்குத் தேடிக் கண்டடைந்த காரணம் பொருத்தமானதாக இருக்கின்றது. ஆனால் னகரத்தைப் பின் வைத்தமைக்கான காரணம் அவர்கள் காலத்திய வீடுபேறு குறித்த சமயம் சார்ந்த கருத்தியலின் தாக்கத்தால் இத்தகைய முடிவுக்கு வந்திருக்கக் கூடும் என்று கருதவேண்டியுள்ளது. ஆண்களுக்கு மட்டுமே வீடுபேறு என்பது ஆணாதிக்க சமூகத்தின் ஆதிக்கத்தையும், பெண்கள் அத்தகைய தகுதியற்ற உடமைப் பொருளாகக் கருதப்பட்டுள்ளனர் என்ற உண்மையையும் வெட்டவெளிச்சமாக்குகின்றது.
இத்தகையதோர் எண்ணத்தோடுதான் தொல்காப்பியர் னகரத்தைப் பின் வைத்துள்ளாரா என்றால், அதற்கான ஆதாரம் இந்த நூற்பாவில் இல்லை. அவர் மிகத்தெளிவாகத் தமிழ் மொழியின் முதல் எழுத்துக்கள் எவை என்பதைப் பேசுகின்றார். தமிழின் முதல் எழுத்துக்கள் முப்பது என்பதைக் கூறுவதற்கு அவற்றில் முதல் எழுத்தையும் இறுதி எழுத்தையும் அடையாளம் காட்டுவதன் மூலம் (அக்காலத்தில் வழக்கில் உள்ள மொழியின்) இடையில் உள்ள எழுத்துக்களை எளிதாக உணர்ந்துகொள்ள முடியும் என்ற நோக்கத்தோடுதான் இத்தகைய நூற்பாவை அவர் உருவாக்கியிருக்க முடியும். பின்னரும் அவற்றை எவை என்று விளக்கிச் செல்கின்ற நூற்பாக்களை அமைத்துள்ளமையையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். ஆகவே, இளம்பூரணர், நச்சினார்க்கினியர் ஆகியோரின் வீடுபேறு குறித்த கருத்தாக்கத்தை நாம் அவர்கள் காலத்திய கருத்தியல் ஆதிக்கத்தின் விளைவு என்று மட்டுமே ஏற்றுக்கொள்ள முடியும்.